அரவிந்தன் நீலகண்டன்
இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஏற்றதாழ்வு இருந்திருக்கிறது. அதனுடன் அந்த ஏற்றத்தாழ்வை மீறியும் எதிர்த்தும் அனைத்து மக்களும் ஆன்ம சொரூபியரே எனும் அத்வைத சமத்துவ குரலும் தொடர்ந்து ஒலித்த படியே இருந்துள்ளது.
அத்வைதத்தின் ஆன்மநேய சமத்துவ ஒளிக்கு சத்தியகாமனும் ரைவகரும் வேதகால எடுத்துக்காட்டுக்கள் ஆவர். சமுதாயம் ஒதுக்கிய தொழுநோயுற்ற பெண்கள் வேதத்தில் மந்திர த்ருஷ்டர்களாகப் போற்றப்படுகின்றனர். [ஆன்மீக சக்தியைத் தூண்டும் மந்திரங்களைக் கண்டறிந்தவர்கள் மந்திர த்ருஷ்டர்கள். உதாரணமாக, காயத்ரி மந்திரத்தைக் கண்டறிந்த விசுவாமித்திரர் ஒரு மந்திர த்ருஷ்டர்.]
இந்த பாரத ஞான மரபின் தொடர்ச்சியை நாம் ராமகிருஷ்ண-விவேகானந்த மரபில் பரிபூரணமாகக் காணலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சாதியுணர்வை முழுமையாகத் தாண்டிய நிலையில், தனது தலை முடியால் தாழ்த்தப்பட்டவரின் கழிவறையை சுத்தம் செய்தார். தாழ்த்தப்பட்டவரிடம் புகையிலையைக் கேட்டு வாங்கினார் விவேகானந்தர். சாதிவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹூக்காக்களை சாதி வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி மனிதர்கள் மனிதர்களிடையே ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை சிறுவயதிலேயே விவேகானந்தர் உடைத்தார்.
தொடரும் இந்த பாரத சரித்திரத்தில் மற்றொரு மாபெரும் ஆளுமையாக திகழ்பவர் அம்பேத்கர் ஆவார். அம்பேத்கார் திறந்த மனமும் சிறந்த சிந்தனைத்திறனும் கொண்டவராக இருந்தார். அவரது குடும்பம் ராமானந்த-கபீர் பக்தி மார்க்கத்தில் வந்ததாகும்.
சாதிக் கொடுமைகளை தாமே அனுபவித்து வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்தவர் அம்பேத்கர். அவரது ஒவ்வொரு போராட்டத்தையும் அவர் முழுக்க முழுக்க அஹிம்சை முறையிலேயே நடத்தினார். உதாரணமாக, காலாராம் எனும் ராமர் கோவில் நுழைவு போராட்டத்தில் மேல்சாதியினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட போதும் அம்பேத்கர் தமது மக்களை அமைதி காக்கச் சொன்னார்.
இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.
சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
பாரத தேசிய ஒற்றுமை என்பது என்ன ?
ஒருமைப்பாடே பாரதத்தின் அடிப்படைத் தன்மையாக உள்ளது. இந்த அடிப்படைத் தன்மையின் இயற்கை என்ன ?
சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார்,
‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும். ‘1
‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே. ‘2சமுதாய பிரச்சினைகள் பற்றி அறிய இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது என்பது அம்பேத்கரின் கருத்து.
ஆனால் இன்றைய அறிவுஜீவி என தங்களைக் கருதிக்கொள்பவர்கள் இவ்வாறு கேட்கலாம்:
“இந்தியர்கள் என்பவர்கள் உண்மையில் ஆரியரென்றும் திராவிடரென்றும் இரு வேறு இனத்தவர்கள் அல்லவா?
அவர்கள் எப்படி ஒரே இனத்தவர்கள் ஆக முடியும்?
ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாசிரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன?
‘இந்தியா’ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க மேல்சாதி கட்டமைப்பல்லவா ?
பல தேசிய இனங்களின் தொகுப்புதானே இந்தியா?”
இத்தகைய கருத்துகளை அறிந்தோ அறியாமலோ பரப்புகிற பலர் டாக்டர். அம்பேத்கரின் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பு வியாக்கியானங்களை எவ்வாறு எதிர் கொண்டார் ?
இவ்விஷயங்களில் அதிசயப்படத்தக்க வகையில் அவரது கண்ணோட்டம் சுவாமி விவேகானந்தரை ஒத்திருந்தது.
ஆரிய இனவாதம் குறித்து சுவாமி விவேகானந்தர் கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
‘நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விக வாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர், எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாக கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாக கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும்.
சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை என கருதுகிறேன்.ஆண்டவர் ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி’களை பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால் நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை , ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூற சான்றாக இல்லை…அதைப்போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர், ஆரியரன்றி வேறல்ல.’ 3
டாக்டர் அம்பேத்கர் மிகுந்த தடைகளுக்கு எதிராக வேதங்களை தாமே கற்றறிந்தவர். மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் செய்த இனரீதியான தவறான வியாக்கியானங்கள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அவருக்குத் தந்தன. உதாரணமாக, அனாஸா என்பதை மாக்ஸ்முல்லர் அ-நாஸா என பதம் பிரிப்பதை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். சாயனரின் பதப்பிரிப்பே சரியானது என அவர் கருதினார்.
டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
நாம் வாழவேண்டுமென்றால்ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரின் மனத்தை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள், அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வு வக்கிரப் பட்டுப் போனதின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.
2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.
3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
4. வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘4
ஹிந்து சமுதாயம் வாழ வேண்டுமெனில் அது தன் சமுதாயத்தின் உயிர்சக்தியை அரித்துக் கொண்டிருக்கும் அனைத்து மூட பழக்க வழக்கங்களையும் களைய வேண்டும். இந்த அவசியத்தை ஸ்வாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்,
‘எத்தகைய ஒரு கீழ்த்தர வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு பாங்கி (தலித்) நம்மிடம் வருகையில் ஏதோ பிளேக் நோய் கண்டது போல அவரை ஒதுக்குகிறோம். ஆனால் ஒரு பாதிரி சில கோப்பை தண்ணீரை அவர் தலையில் விட்டுவிட்டால், ஒரு கோட்டும் போட வைத்துவிட்டால் நமது வைதீகர் அவரை தன் உள்ளறைக்கே அழைத்துச் சென்றுவிடுவார்…
நம் மதமே ‘என்னைத்தொடாதே ‘ என்பதில்தான் உள்ளது…. இந்த திருக்கூத்துகள் மேலும் தொடர்ந்தால் நாம் அழிந்து படுவோம். ‘5
இதே கருத்தை அம்பேத்கரும் கூறியுள்ளார். காத்மா காந்தி தன் ‘ஹரிஜன் ‘ பத்திரிகையின் தொடக்க மலருக்கு செய்தி அனுப்ப பாபாசாகேப் அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்ட போது அம்பேத்கர் பின்வரும் செய்தியினை கொடுத்தார்,
‘சாதியத்தின் விளைவே தீண்டத்தகாதோர் எனும் பிரிவு. இனி வரும் கடுமையான காலகட்டத்தில் ஹிந்து சமுதாயம் உயிர்வாழ இக்கொடுமை ஹிந்து தர்மத்திலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘6
சமஸ்கிருதம் தேசிய மொழியாவதன் அவசியம்
சாதியத்தை ஒழிக்க பின்வரும் திட்டத்தை ஸ்வாமி முன் வைக்கிறார்:
‘நம் பாரதத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. எனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். ..எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக பாரம்பரியம் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.’7
“தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்” எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்,
‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.’
மேலும் அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷனிலும் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், பாரதத்தின் ஆட்சிமொழியாக தகுந்தது சமஸ்கிருதம் மட்டுமே எனவும் அதுவே சமுதாய ஏற்ற தாழ்வுகளை போக்கிடும் வழி என்றும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் மீண்டும் குறிப்பிட்டார் அவர்.
அன்று மதத்தின் பெயரில் நிலவிய மானுடத் தன்மையற்ற நடத்தைகளால் முழுமையாக அந்த அமைப்பில் அவர் நம்பிக்கை இழந்திருந்தார். நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கஷ்டங்களும், அவரே அனுபவித்த துயரமும் அவரது வார்த்தைகளில் கடினத்தை ஏற்றியிருந்திருக்கலாம். இருந்த போதும் இந்த மண்ணின் ஆன்மிக ஊற்றிலிருந்தே இத்துயரத்தை துடைக்கும் அமுதம் கிடைக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எனவேதான் அவர் இந்த மண்ணின் மைந்தரான புத்த பகவானின் காருண்ய வழியை தேர்ந்தெடுத்தார்.
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்காக திகழ வேண்டும். நீங்கள் உங்கள் தேசத்தவரிடம் ஆயிரம் குறைகளை காணலாம். ஆனால் அவர்கள் நம்மவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் உங்களை பழித்தாலும் என்ன இழி சொற்களை வீசினாலும் அவர்களை அன்பு செய்வதே உங்கள் கடமை. அவர்கள் உங்களை துரத்தினால் கூட மெளனத்தில் மரணத்தை எதிர் கொள்ளுங்கள். குரு கோவிந்த சிம்மனைப் போல வாழுங்கள், மடியுங்கள். அத்தகைய மனிதனே உங்களில் ஹிந்து எனும் பெயருக்கு தகுதியானவன்.”
என்று விவேகானந்தர் முழங்கினார்.9
பகவான் புத்தரிடம் விவேகானந்தரின் மனம் இயல்பாகவே லயித்தது. புத்தமே ஹிந்து சமயத்தின் பரிபூரணம் என கருதினார் ஸ்வாமி விவேகானந்தர்.
‘புத்தசமயம் பாரதத்தில் இருந்து மறைந்ததால் அதனுடன் எழுந்த காருண்ய சமுதாய சீரமைப்பு அலையும் மறைந்தது…இந்தியாவின் சரிதலுக்கும் அதுவே காரணமாயிற்று.”
என அவர் கூறினார்.10
அம்பேத்கருடன் நடந்த சந்திப்பு ஒன்றில், இந்த நூற்றாண்டின் சிறந்த இந்தியர் என சுவாமி விவேகானந்தரை அம்பேத்கர் கருதியதாக ஜவஹர்லால் நேருவின் அந்தரங்க காரியதரிசி பதிவு செய்திருக்கிறார்.11
பாரதம் குறித்த அடிப்படையான பார்வை குறித்தும், பாரதத்தின் மேன்மைக்கான செயல்திட்டம் குறித்தும் சுவாமி விவேகானந்தரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி எத்தனை ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது மேலே கூறியுள்ளவற்றால் தெரியும். இந்த இருதய ஒற்றுமை எப்படி வந்தது?
சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுட துன்பத்தைக் கண்டு இரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுட துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையை துறந்து அதற்காக உழைத்தனர். அத்தகைய இரு பேரான்மாக்களின் பார்வைகளின் தேசத்துக்கான நல்வழிப்பார்வை ஒன்றானது அதிசயமல்லவே.
பயன்படுத்தப்பட்ட நூல்கள்
- லாகூர் பேருரை சுவாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம். III
- டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Part-II Chapter-IV
- சுவாமி விவேகானந்தர் , கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரைகள்
- டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII,
- சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். VII
- டாக்டர் அம்பேத்கரின் செய்தி ஹரிஜன், பிப்ரவரி 11, 1933
- சுவாமி விவேகானந்தர், சென்னை பேருரை (பாகம்-III)
- டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித்தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம் தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11.ஸெப்டம்பர், 1949.
- சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். III
- சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேருரை 26 செப்டம்பர் 1893
- எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3: http://jeyamohan.in/?p=4715
No comments:
Post a Comment